நிலாவே வா...

என்னருமை வெண்ணிலவே
இத்தனைநாள் எங்குசென்றாய்?
உன் வரவைக் காணாமல்
உறக்கமின்றி விழித்திருந்தேன்
கண்சிமிட்டும் விண்மீன்கள்
கேலிசெய்து சிரிக்குதடி

மேகத்தில் முகம்மறைத்து
விளையாடிச் சென்றாயோ?
மோகத்தில் எனைமறந்து
காதலனைச் சேர்ந்தாயோ?
வேகமாய் வந்துவிட்டு
விரைவாகச் சென்றாயோ?
பாவமேதும் செய்தேனோ
மறைக்காமல் சொல்லிவிடு.

காதலியைக் காணாமல்
கவலையால் துவண்டபோது
ஸ்நேகிதியாய் அருகிருந்து
சோகத்தைப் பகிர்ந்துகொண்டாய்
ஆதரவாய் முகம்பார்த்து
அழகாகப் புன்னகைத்தாய்
உன்னழகில் துயர்மறந்து
என்னவளை நினைத்திருந்தேன்.

இன்னும் என்னைப் புரியலையா
இரக்கமேதும் தோணலையா?
புன்னகைக்கும் வெண்ணிலவே
என்னிலையைச் சொல்லிவிட்டேன்
கண்ணிமைக்கும் நேரத்தில்
வந்துவிடு என்னெதிரே...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!