என்னத்தைச் செய்தீங்க...(5)
என்னத்தைச் செய்தீங்க...(கவிதைக்கதை - ஐந்தாவது பகுதி) கடந்தது சிலநாட்கள் கனத்த மௌனத்துடன் நகர்ந்தது சிலபொழுது நேர்கொள்ளாப் பார்வையுடன் நிலவிட்ட மன இறுக்கம் சங்கடம் கொடுத்தாலும் துலங்கிட்ட ஒருவழியைக் கண்டுகொண்டார் செல்வமணி. புலர்ந்திட்ட அன்று புதியதோர் காலையில் மலர்ந்திட்ட விழிகள் மகிழ்ச்சியில் அகன்றிட கோலமிட்ட வாயிலில் கொள்ளை அழகுடன் வந்து இறங்கியது வாகனம் ஒன்று... வாகனம் கண்டதும் விழிகளில் வியப்புடன் தாயிடம் சொல்லிடச் சென்றனர் பிள்ளைகள் கல்லிலே தோசையைக் காயவே விட்டுவிட்டு நல்லநாள் வந்ததென வாசல்வந்தாள் சிவகாமி... என்னதான் என்மீது கோபம் கொண்டாலும் என்னவருக்கு என்மேல் பாசம் அதிகம்தான் என்று மனமகிழ்ந்து "என்னங்க" என்றவாறு சென்று கணவனை எழுப்பினாள் சிவகாமி... மக்களும் மனைவியும் மகிழ்ந்ததைக் கண்டாலும் மனதின் ஓரத்தில் மருட்சியும் தென்பட போவது வரைக்கும் போகட்டு மென்றெண்ணி வாகனம் நோக்கிச் சென்றார் செல்வமணி.