என்னத்தைச் செய்தீங்க...(6)

என்னத்தைச் செய்தீங்க...(கவிதைக் கதை-ஆறாவது பகுதி)

ஆரத்தி யெடுத்து
அழகாய்ப் பொட்டிட்டு
காருக்குச் செய்த
மரியாதை எதனையும்
கணவன் எனக்குக்கூடச்
செய்ததில்லை என்றபடி
தனக்குள் புலம்பியே
நெடிதுயிர்த்தார் செல்வமணி

வாகனம் வாங்கினால்
போதுமா என்ன,
வாகான ஓட்டுனரைத்
தேடுங்கள் என்றுசொல்ல
நாளுக்கு நூறென்று
நறுவிசாய்ப் பேசியே
காருக்கு ஓட்டுனரைக்
கொண்டுவந்தார் ஆசிரியர்.

வந்த ஓட்டுனரைக்
கொஞ்சமும் விட்டிடாமல்
செந்தூர்க் குமரனையும்
சீர் குலசை அம்மனையையும்
கன்னியா குமரியையும்
கடற்கரை மாதாவையும்
ரெண்டுநாள் விடுமுறையில்
கண்டுவரத் திட்டமிட்டு,

வண்டியில் புறப்பட்டு
வழியில் இளைப்பாறிவிட்டு
சென்று கிளம்புகையில்
சக்கரம் பழுதாக,
உண்டுவரக் கொண்டுசென்ற
உணவுவகை அத்தனையும்
வழியோர மரநிழலில்
உண்ணும் நிலைவரவே,

உள்ளுக்குள் எழுந்துவந்த
உக்கிரம் புதைத்தபடி,
ஊரோட கண்ணெல்லாம்
மொத்தமாய் ஒன்றுபட்டு,
காரோட சக்கரத்தைப்
பாதித்த தென்றுசொல்லி
பழுதினை நீக்கிப்பின்னர்
வீட்டுக்கே திரும்பச்சொன்னாள்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!