என்னத்தைச் செய்தீங்க...( 7)

பள்ளிசென்ற நாட்களிலே
பயணம்செய்ய இயலாமல்
முற்றத்தில் வாகனம்
முழுவெயிலில் நிற்கக்கண்டு,
மூவாயிரம் ரூபாய்
முழுசாய்ச் செலவுவைத்து
ஆடைவாங்கிச் சூட்டிவிட்டாள்
அழகாகச் சிவகாமி...

வார இறுதிநாட்கள்
வந்தது மறுபடியும்...
சக்கரத்தில் எலுமிச்சை
குங்குமம் தடவிவைத்து
பத்திரமாய்ப் புறப்பட்டு
பழனிக்கு நேர்ந்துகொண்டு
அக்காவின் வீட்டுக்கு
அழையாமல் சென்றபோதும்,

ஆரத்தழுவிக் கொண்டு
அன்போடு வரவேற்று
காரக் கறிவறுவல்
செய்துவைத்து விருந்தளித்து,
மதுரைக்குச் சென்று
மகள்வீட்டைப் பார்த்துவர
மறுநாள் ஒருநாளும்
வாகனம் கேட்டாள் அக்கா...

அக்கா கேட்ட கணம்
'திக்'கென்று அதிர்ந்தாலும்
அக்கா நீ கேட்டும்
மறுப்பேனா என்றுசொல்லி,
பக்குவமாய்த் தன்பெருமை
காப்பாற்றும் வண்ணமாக
மதுரைக்கு வந்துநானும்
மகளைப்பார்க்க வேணுமென்றாள்...

அக்காவும் தங்கையும்
அருமை மக்களுடன்
மதுரைக்கு மகிழ்வுடன்
செல்லும் வழியிலே
மறுநாள் வேலைக்காய்
ஊர்செல்லும் கணவரை
பேருந்து நிறுத்தத்தில்
இறக்கிவிட்டாள் சிவகாமி

மத்தியான வெயில்
மண்டையைப் பிளந்தாலும்
மகிழ்வுந்தைப் பார்த்து
இகழ்நகையைச் சிந்திவிட்டு,
கரையோர இருக்கையைத்
தேர்ந்தெடுத்து அமர்ந்தபடி
பணிக்காகப் பேருந்தில்
புறப்பட்டார் செல்வமணி.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!