Tuesday, November 25, 2008

வாரணம் ஆயிரம்...


வாரணமாயிரம் சூழவேவந்து
நாரணன் நங்கையைச்
சூடிடக் கனவுகண்டு
தேடுகிறாள் கோதை
புலராத விடியலில்...

ஏக்கத்தின் மிகுதியால்
தூக்கம் தொலைந்துபோக
தூதுசொல்லத் தோதாகப்
பூங்குயிலைத் தேர்ந்தெடுக்க,

அங்கே,
தூதுசெல்லும் குயிலினமும்
சேவலுடன் கூடிநிற்க
மாதுநின்று மருகுகிறாள்
மன்மதனைச் சினந்தபடி...

காத்திருந்த கண்கள்ரெண்டும்
கலங்கிக் குளமாக
பூத்திருந்த நாளும்தேய்ந்து
பொழுதடைந்து இரவாக,

மாலையைச் சூடிய
மயக்கத்தில் மதிமயங்கி
மார்கழிப் பூவெனவே
மங்கையவள் காத்திருந்தாள்...

காதலின் வலிகண்டு
இளைத்துப்போனது மனசு
ஆனாலும்
காதல்செய்ய மட்டும்
சளைக்கவே இல்லை...

ஆழி வெண்சங்கும்
அவனுடைய குழலிசையும்
கேலிசெய்து அங்கே
குரலெழுப்பிச் சிரித்திருக்க,

ஆழிமழை வண்ணனின்
அதரச்சுவை எண்ணி
நாழிகைகள் நகர்ந்திடாமல்
தவிக்கின்றாள் நங்கையவள்...

0 comments: