என்னத்தைச் செய்தீங்க...(ஒன்பதாவது பகுதி)
தொய்வுற்ற நடையுடன்
தந்தை வெளியில்செல்ல
ஐயுற்ற பிள்ளைகள்
அமைதியை அணிந்தபடி,
வெய்யிலில் வாடிய
கொடியாய் முகம்கறுத்து
பையவே போயங்கே
வாசலில் அமர்ந்தனர்...
உறையிட்ட வாகனம்
ஒய்யாரமாய் நிற்க,
உடைவாங்கப் பணமின்றி
நிற்கும் மனத்தவிப்பில்
முறையற்ற ஆசையால்
மனவருத்தம் வந்ததென்று
மருகினாள் சிவகாமி
மௌனமாய் மனதுக்குள்...
பக்கத்து வீட்டில்
வெடித்த வெடியிலொன்று
முற்றத்தில் வந்து
சத்தமாய் வெடித்ததிர
எட்டிப்போய்ப் பார்த்த
பிள்ளைகள் இருவரும்
பட்டாசும் பையுமாக
அப்பாவைப் பார்த்தார்கள்...
பைநிறைய வெடிவகைகள்
பளபளக்கும் புது உடைகள்
நெய்யிலே செய்த
நெஞ்சினிக்கும் சுவையினங்கள்
என்று யாவையும்
எடுத்துவைத்த கணவனிடம்
கையிலே மோதிரம்
இல்லையே எங்கேயென்றாள்...
Monday, December 15, 2008
என்னத்தைச் செய்தீங்க... (9)
Labels: கவிதைகள், கவிதைக் கதை
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment