Tuesday, December 16, 2008

காலச் சுவடுகள்



அவள்,
வழிமறந்த கோவலனைப்
பழிவாங்க முயலாமல்
வழிமாற்றிப் பிள்ளைகளைப்
பழியின்றி வளர்த்த அன்னை...

கல்லும் மண்ணுமாய்க்
கலந்து கட்டிய வீட்டை
தன்
சொல்லாலும் செயலாலும்
சொர்க்கமாக்கிக் காட்டியவள்...

அவள்,
கையளவு அரிசியிட்டு
கதகதப்பாய்க் கஞ்சிகாய்ச்சி,
கைபொறுக்கும் சூட்டில்
ஊட்டிய கைமணத்தில்
நெய்யிட்ட பால்சோறும்
தோற்றுப்போய் ஓடிவிடும்...

வாடா என்றருகிருத்தி
வாஞ்சையாய்க் கரம்பிடித்து
கூடாத நட்புடனே
கூடாதே என்றுரைக்க,
இன்று,
கோடானு கோடி
கொடுப்பவர் வந்தாலும்
மீறாமல் நிற்கும்பிள்ளை
மாயமோ அவளின் வார்த்தை?

அன்று,
இல்லாமை என்றவொன்று
இருந்ததே தெரியாமல்
வெள்ளாமைக் காட்டில்
வேலைசெய்து உடல்மெலிந்தும்
கல்லாமை இல்லாமல்
பிள்ளைகளை வளர்த்துவிட்டு,

அன்னையென்ற தெய்வமொன்று
இல்லாத குறையன்றி
இல்லாமை ஏதுமின்றி
இமயமாய் நிற்கின்ற
பிள்ளைகளின் புகழைமட்டும்
காணாமல் போய்விட்டாள்...

அன்னையின் நினைவுகளை
அடிமனதில் சுமந்தபடி
கண்ணீரின் சுவடுகளை
கதவுக்குள் பூட்டிவிட்டு,
நாடுவிட்டுப் போனபிள்ளை
தேடிவந்தான் சுவடுகளை...

கூடுகட்டி வாழ்ந்ததுபோல்
குளிரிலும் மழையினிலும்
அன்னையின் கதகதப்பை
அவனுக்கு அளித்தவீட்டில்
சன்னலும் கதவுமின்றி
சிதைந்திருக்க வருந்திநின்றான்...

அவன்,
வீடென்று அன்னையின்
விரல்பிடித்து நடந்த தலம்
இன்று,
காடாகக் கிடக்கக்கண்டான்...
வாடாமல் என்ன செய்வான்?

2 comments:

செல்வமுரளி said...

வாடினாத்தானே அவன் பிள்ளை!

எப்படிக்கா உங்களால் மட்டும்! :)

சுந்தரா said...

:) வாங்க முரளி!

கருத்துக்கு நன்றிகள்!