மழைவிழும் எழில்வனம்



மழைக் காற்றது மூங்கில்வழி
நுழையும் ஒலி கேட்கும்
இசைகேட்டிட மகிழ்வில்
தரு வகைகள் தலையாட்டும்

இதழின் வழி மதுவோடிட
இலையும் நிலை தளரும்
கிளை யாடிய மலர்கள்பல
மண்ணின் மடியுதிரும்

வழியும்இசை பரந்தோடிட
மகிழும் உயிரினங்கள்
வழிமாறிட மலைப்பாறையில்
வதியும் குருகினங்கள்

துளியும்விழத் தோகைமலர்
விரிக்கும் மயிலினங்கள்
ஒளியும்செல ஓசையுடன்
பிளிரும் களிறினங்கள்

ஊதும்இசை யொலிகேட்டிட
அதிரும் எழில்மேகம்
காதில்குளிர் வாடைதொடத்
தழுவும் இளமானும்...

மன்றின்மழை பெரிதாகிட
வெளியில் வரும்நாகம்
கொன்றைமலர் விரிபோர்வையில்
களித்தே நெளிந்தாடும்...

கண்டேயதன் எழிலில்மிக
மையல்கொடு தானும்
வண்டாடிடும் மலர்த்தூளியில்
கவியும் விளையாடும்...

கொண்டாடிடும் மழைநாளதன்
கோலம்நிறை அழகில்
உண்டோ அதன் நிகராய்
மற்றெதுவும் இவ்வுலகில்?

கருத்துகள்

  1. அழகின்
    அருமை
    ஒவ்வொரு வரிகளிலும்
    ஒளிக்கின்றன


    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. நன்றி திகழ்மிளிர்!

    இயற்கையென்றாலே அழகாய்த்தானே இருக்கும் :)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!