அவளை...இப்படித்தான் அழைக்கிறோம்!
ரெண்டுமூன்று வருஷங்களாய் இங்கேதான் இருக்கிறாள்... வந்தபோது வைத்திருந்த புன்னகை மாறாமல், என்ன வீட்டில் சொன்னாலும் எதிர்வார்த்தைபேசாமல்... விருந்தினர்கள் வந்தாலும் வேறுபாடு பார்க்காமல், வேலை மிகவென்றாலும் முகச் சுளிப்புக்காட்டாமல்... கண்ணையும் கசக்காமல் காசெதுவும் கேட்காமல் தன்னுடைய நோவுக்காய் விடுமுறையும் எடுக்காமல்... சொல்லுவ தெல்லாமும் செய்து முடித்துவிட்டு இன்னமென்ன இருக்குதென்று எதிர்பார்த்து நிற்பதுபோல்... என்ன பிறவியிவள் என வியக்கவைத்தவளை... 'அம்மா' என்றழைக்கிறான் என்மகன், 'அடியே' என்றழைக்கிறேன் நான்...