அக்கரைப்பூக்களின் இக்கரை ஆசை!


காட்டுப்பூக்க ளெல்லாம்
ஒருநாள்
கடவுளிடம்போய் முறையிட்டன...

ஊருக்குள் பூக்கிற
ஒவ்வொரு பூவுக்கும்
பேரும் பெருமையும்
நிறையவே இருக்கிறது...

ஆனால்,
காட்டுக்குள் பூத்துச்
சிரிக்கின்ற எங்களை
கவனிக்கக்கூட
யாருமே இல்லையென்று...

கேட்டுக்கொண்டிருந்த கடவுள்
வாய்விட்டுச் சிரித்துவிட்டுக்
கூட்டிப்போய் காட்டினார்
நாட்டுப்பூக்களின் நிலைமையை...

கொட்டிக் கவிழ்த்துவைத்து
கற்றைநூலில் இறுகக்கட்டி,
சுற்றிப் பந்தாக்கிக்
கூடையிலே போட்டுவைத்து,

அப்பப்போ மலர்களின்
மயக்கம் தெளிவிக்க,
பச்சைத் தண்ணீரை
அள்ளித் தெளித்துவிட,

அச்சச்சோ என்னை
விட்டுவிடேன் என்று
அழக்கூட முடியாமல்
விதிர்த்திருக்கும் பூக்களையும்,

மல்லிகை மரிக்கொழுந்து,
சம்பங்கி ரோஜாவென்று
கண்ணுக்கு அழகாகக்
கலந்தெடுத்து மாலைகட்டி,

கண்ணாடிக் காகிதத்தில்
சுற்றிவைத்துத் தொங்கவிட,
கழுத்திறுகிக் காத்திருக்கும்
கதம்ப மலர்களையும்,

தலைச்சிடுக்கில் சிக்கி
தன்னுடல் காயமாகப்,
படுக்கையிலே பாவமாக
நசுங்கிய பூக்களையும்,

பார்த்துப் பயந்துபோய்
கானகமே சொர்க்கமென்ற
காட்டுப் பூக்களிடம்
கடைசியாகச் சொன்னார் கடவுள்...

நாட்டிலின்று,
நோட்டுமாலை கட்டிப்போட்டு
நாலுபேர் பழக்கிவிட,
நாட்டுப்பூக் கட்டுவதில்
நாட்டம் குறைந்திருக்க,
காட்டுக்கு வரவா என்று
என்னிடம்
கேட்டு நிற்கின்றன
இந்த நாட்டுப்பூக்களென்று!

கருத்துகள்

  1. நடையும் ஆண்டவிதமும் மிக மிக அருமையாக இருந்தது. எனக்கு இது ஒரு சிறந்த கதையாகவும் படுகிறது.
    I like to share this with small kids in and around our locality.
    உங்களளின் அழகிய தமிழை ரசித்தேன். மீண்டும் இது போல் நிறைய எதிர்பார்க்கிறேன்!

    பதிலளிநீக்கு
  2. நல்ல கற்பனைங்க சுந்தரா.......எளிமையாகவும், அழக்காகவும் தொடுத்திருக்கிறீர்கள் இக்கவிதை மாலையை......வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!