கடல்புறத்து வாழ்க்கை
அலையும் ஆரவாரமுமாய்
அமைந்த சிறுகுடி...
வலையும் வள்ளமுமாய்
அலங்கரித்த கடல்மடி...
அதிவேகக் காற்று,
அகங்காரப் பெருமழை,
மோகித்த அலைக்கரங்கள்
மூர்க்கமாய் எழுந்துவர,
மனித ஓசைகள்
முற்றிலும் ஒடுங்கிப்போய்,
இயற்கையில் குரல்மட்டுமே
எதிரொலித்தது அங்கு...
பட்டதெல்லாம் போதாதா
பாடெல்லாம் மறந்துபோச்சா?
விட்டுச்செல் கரையை என்று
அலைகள் விரட்டினாலும்,
எட்டிச்செல்ல முடியாமல்
இணைந்துவிட்ட மனசுகள்
தொட்டெடுத்துப் பூசிக்கொண்டன
நெற்றியில் கடலின்மண்ணை ...
சுற்றிச் சுழன்றுவந்த
புயலும் பெருமழையும்
அந்தப்
பற்றும் பாசமும்கண்டு
மிரண்டுபோய்ப் பின்வாங்க,
எங்கே அகப்படுவோம்
எப்போது சுகப்படுவோம்
என்ற
எந்தக் கேள்வியையும்
எண்ணத்தில் நிறுத்தாமல்,
மற்றொரு நாளின்
பிழைப்புக்காய் வலையெடுத்து,
மீண்டும்
அலையாடும் கடலுடன்
விளையாடப் புறப்பட்டது,
வாழ்வெனும் பெருஞ்சுழலில்
அகப்பட்ட கூட்டமொன்று.
//வாழ்வெனும் பெருஞ்சுழலில்
பதிலளிநீக்குஅகப்பட்ட கூட்டமொன்று//
மீனவ மக்களின் வாழ்க்கை வலிகளை அருமையா செதுக்கியுள்ளீர்கள் சகோ..
சூப்பர்!
//எங்கே அகப்படுவோம்
பதிலளிநீக்குஎப்போது சுகப்படுவோம்
என்ற
எந்தக் கேள்வியையும்
எண்ணத்தில் நிறுத்தாமல்,
மற்றொரு நாளின்
பிழைப்புக்காய் வலையெடுத்து,
மீண்டும்
அலையாடும் கடலுடன்
விளையாடப் புறப்பட்டது,
வாழ்வெனும் பெருஞ்சுழலில்
அகப்பட்ட கூட்டமொன்று.//
கடல் புறத்து வாழ்க்கையைக் கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள்.