இடுகைகள்

பிப்ரவரி, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கல்யாண பாக்கியம்!

படம்
பொழுது விடியுமுன்னே நடந்தது பாக்கியத்தின் கல்யாணம்... அழகாயிருந்த ஒரு அம்மியை மிதிக்கச்சொல்லி, அருந்ததியைக் காட்டுகையில் இருட்டுத்தான் தெரிந்தது... மெட்டிபோட்ட நிமிஷத்தில், அங்கே குட்டிப் பூகம்பம்... காலில், தங்கக்கொலுசு இல்லையென்று நாத்தனார் குரலெழுப்ப, கண்ணில் நீர் சுமந்தவளின் கையைப் பிடித்துக்கொண்டு, கல்யாண மேடையைக் கரகரவென்று சுற்றிவந்தது ஒரு கூட்டம்... எட்டிநின்றவர்கள் வீசிய பூக்கள் கிட்டத்திலிருந்தவர்களின் கோபப் பார்வைபட்டுச் சுட்டதுபோலிருந்தது அவளுக்கு... மணமகன் அறைக்குள் வந்ததும் மாமியார் சொன்னார், பாக்கி நகைபோடாம பால்பழம்கூடக் கிடையாது என்று... பதைத்துத் திரும்பினாள் பாக்கியம்... பக்கத்தில், பிடித்துவைத்த பிள்ளையாராய்ப் பேசாமலிருந்தான், பத்துநிமிஷம் முன்னால் அவள் பாதம் பிடித்த மாப்பிள்ளை!

சட்டைக்குள் புகுந்துவிட்ட அட்டைகள்!

அட்டை கடித்துவிட்டால் அதிக ரத்தம் போகுமென்று தீயால் சுட்டுப் பிரிப்பார்கள்... ஆனால் இன்று, சட்டைப்பை முழுக்க அட்டைகளின் ராஜ்ஜியம்... சுட்டுப் பிரிக்கவோ எட்டிக்கடக்கவோ முடியாமல் வட்டிக்குள் புதைகிறது வாழ்க்கைப் போராட்டம்.

அவள் ஆத்திரமும் அழகுதான்!

காலையிலிருந்து எதற்காவது கத்திக்கொண்டுதான் இருக்கிறாள், ஆனாலும் அவளிடத்தில் கோபம் வரவில்லை எனக்கு... வாசல் தெளித்துக் கூட்டுவதில் தொடங்கி, ராத்திரி வேலைகளை முடித்து அயறும்வரை, அவளுக்கே தெரியாமல் ஆங்காங்கே உதிருகிறது அவளுடைய ஆத்திரத்தின் துணுக்குகள்... கல்லூரி விட்டுக் கொஞ்சம் தாமதமாய் வந்தாலும், பண்பலை வரிசையில் பாட்டுக்கேட்டு ரசித்தாலும் எல்லாமே அவளுக்கு எரிச்சலாய்த்தான் இருக்கிறது... கண்ணுக்குள் பொத்திவைத்த கடைக்குட்டித் தம்பி அவன், கணினியுடன் உட்கார்ந்து காலம் கடத்தினால் என்னவோ தெரியவில்லை, எரிகிறது அவளுக்கு... கண்ணாடிப் பார்வையில் அப்பா கதைகள் படிக்கக்கண்டால், என்னைக் கவனிக்க யாருமில்லை என்றுசொல்லித் தன்னாலே பேசுகிறாள் தன்னிரக்கம் காட்டுகிறாள்... அவர், என்னடி ஆச்சுதென்று கொஞ்சம் அருகில்சென்று, கண்பார்த்துக் கேட்டுவிட்டால், ஒன்றுமே பேசாமல் உருகித்தான் போகிறாள்... ரொம்பத்தான் அலட்டுகிறாய் என்றுசொல்லி யாரேனும் கோபத்தில் கொஞ்சம் முகம்திருப்பிக் கொண்டுவிட்டால், பின்னாலே அழுகிறாள் பேச்சிழந்து தவிக்கிறாள்... என்னதான் ஆச்சு அம்மா? ஓடிய ஓட்டத்தில் நோயுற்றுப் போனாயோ? வயதின் மாற்றங்களால் வலுவ

வீட்டு அழைப்புகள்!

எடுத்தவுடன் மௌனம், அடுத்தவார்த்தை 'நான் தான்', தொடுத்துப் பேசிட வார்த்தைகள் தேடி தோற்றுத் தொடருகிற நிமிஷங்கள்... சொற்களைச் சேர்க்கச் சிரமப்படுகிறாளென்று இக்கரையிலிருந்தே அப்பட்டமாய்த் தெரியும்... வேளாவேளைக்குச் சாப்பிடு, வாரம் ஒருமுறை கூப்பிடு திக்கித்திக்கி வந்துவிழும், திரும்பத்திரும்பக் கேட்கும் தொலைபேசி வார்த்தைகள்... ஒருமைக்குத் தாவி ஒற்றை ஒற்றையாய்ச் சொல் உதிர்த்து, நெருப்புப் பற்றவைத்து நீங்கிப்போவாள் அவள்... அலையடிக்கும் கடல் ஆயிரமாயிரம் மைல் அடைத்திருக்கும் கதவு அத்தனையும் தாண்டி, அலைக்கழித்துக்கொண்டிருக்கும் அவளுடைய குரல்... நினைவெல்லாம் செயலிழந்து நிற்கும் தருணத்தில், நனைந்துபோன இமைகள் மட்டும் ஞாபகமாய்ச் சொல்லும், பிரிவையும் ஜெயித்துநிற்கும் காதலின் அர்த்தத்தை...!

காகங்கள் கரைவதில்லை!

முன்னெல்லாம், காகம் கரைந்தாலே கண்கள் துடித்தாலோ இருப்புக்கொள்ளாது அம்மாவுக்கு.. வாசல் பக்கத்தைப் பார்வை அளந்திருக்க, அரைக்கால்படி அரிசி அன்றைக்கு அதிகமாகவேகும்... ஆறுமுக நேரி ஆச்சி வருவாங்க, பேயன் விளையிலிருந்து பெரியம்மா வருவாங்க... அம்மங்கொடைக்கு அழைக்க அத்தை வருவாங்க, மாடு கன்னுபோட்டுதுன்னு மாமா வருவாங்க... இப்படி, ஆசையாய்வரும் உறவுகளை அடிக்கடி எதிர்பார்த்து அன்பெனும் உயிர்ப்போடு காத்துக்கிடந்த காலம்... அவிச்ச கிழங்கும் வறுத்த கடலையும் கடம்புப் பாலும், கருப்பட்டிப் புட்டுமாகப் பகிர்ந்துகொள்ளப்படும் பண்டங்கள் அத்தனையும் பாசத்தின் வாசனையைத்தான் பளிச்சென்று சொல்லும்... வந்துசேரும் உறவுகள் தங்கியிருக்கிற வரைக்கும் கூத்தும் கும்மாளமும் வீட்டில், குவிந்துதான் கிடக்கும்... ஆனால்,இன்று அழைப்பு மணியைக்காட்டிலும் அதிகமாய் ஒலிப்பது தொலைபேசி மணிகள்தான்... வரவா என்று தொலைபேசிக்கேட்டு வரலாம் என்று உத்தரவுபெற்று, ஒருவேளை கைநனைத்து ஓடிப்போகிற உறவுகள்... அவசியம் வரும்போது அழைப்பெனும் போர்வைக்குள் விலையாக வாங்கப்படுகிற உறவுகளின் பாசம்... ஆக, மு

நாடகம்!

ஓடுகிற வாழ்க்கையில் உயிர்கள் ஓடிக்கொண்டேதான் இருக்கிறது... காணுகிற கனவுகளைக் கண்ணில் சுமந்தபடி... மூடுகிற கதவுகளை முட்டித் திறந்தபடி... ஆளுகிற ஆசைகளை அடையத் துடித்தபடி... நாடுகிற பொருள்களைத் தேடிச் சலித்தபடி... கூடுகிற உறவுகளில் குற்றம் கண்டபடி... வாடுகிற நிகழ்வுகளில் வருந்தித் தோய்ந்தபடி... வீழுகிற தருணத்தில் வெறுப்பை உமிழ்ந்தபடி... ஆட்டுகிற கயிற்றின் அசைவுக் கேற்றபடி ஆடி நடிக்கிறது, நூல் அறுகிற நாள்வரைக்கும்!