இடுகைகள்

பிப்ரவரி, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெற்ற மனசு

படம்
கல்லூரி விடுதிக்குப்போன கடைக்குட்டியின் முகம் கண்ணிலேயே நிற்க, காசுதேற்றும் மும்முரத்தில் கீரை விற்றுக்கொண்டிருந்தாள் அவள்... இருக்கப்பட்டவர்கள் இறைச்சியையும் இல்லாதவர்கள் எலும்பையும் வாங்கிப்போக, ஞாயிற்றுக்கிழமையைச் சபித்தது அந்த ஏழைத்தாயின் மனசு... எண்ணிப்பார்த்த சில்லறை இளக்காரமாய்ச் சிரிக்கையில், கல்லூரிக்குப் போகிற கடைசி பஸ்ஸும் கடந்துபோய்விட, இடுப்புச் சேலையில் ஏக்கத்தையும் முடிந்தபடி, வாடிய கீரையோடு வீட்டுக்குப் புறப்பட்டாள்... ஆனால், அவளை விட்டுச் சாலையிலேயே நின்றது சங்கடத்துடன் மனசு. ***

ஒரு கவிஞனின் கதை

வார்த்தைகளுக்கிடையே சிக்கிய வாழ்க்கையின் துயரமும் எழுத்துகளுக்கிடையே சிக்கிய ஏழ்மையின் வலிகளும் வரிகளுக்கிடையே சிக்கிய பிரிந்துபோன உறவுகளும் அவனைக் கவிஞன் என்று ஊருக்கு அடையாளம்காட்ட, காலியாய்க் கிடந்த சமையலறைப் பாத்திரங்களையும் மூளியாய்க் கிடந்த முகத்தையும் கழுத்தையும் காட்டி, காசுக்குப்பெறாத மனுஷனென்று கணவனை அடையாளம்காட்டினாள் அவள்... வாழ்க்கையில் தொலைத்ததை வார்த்தைகளில் பிடித்த மகிழ்ச்சியில் அவன் வாழ்ந்துகொண்டிருக்க, வார்த்தைகளைக் கண்டெடுத்து அவனை  வருத்துவதே வாழ்க்கையென்றிருந்தாள் அவள்! ****

கலப்பதிகாரம்!

படம்
  படபடக்கிற மனசு பார்வையின் கோணங்கள் புதுசு சிறைப்படத் துடிக்கிற தவிப்பு சின்னச்சின்னதாய்ச் சிலிர்ப்பு... கண்கள் நிறையக் கனவு காலம் மறந்த நினைவு எழுதஎழுதக் கவிதை எல்லாப்பக்கமும் இனிமை... சும்மாயிருந்த மனசில் நீ தென்றலாய்த்தான் கலந்தாய், ஆனாலும், எழுந்ததென்னவோ ஏகப்பட்ட அதிர்வலைகள்... பார்க்கும் போதெல்லாம் பிரியத்தின் துளிகளை வீசிவிட்டுச் செல்கிறாய்... அவையெல்லாம் என் முற்றத்துத் தோட்டத்தின் முல்லைக்கொடியினில், மொட்டுக்களும் பூக்களுமாய் மலர்ந்து கிடக்கின்றன... அதைக் கோர்த்துக் கொடுத்திட வார்த்தைகளைத் தேடித்தேடி, செம்மொழியின் எல்லைகளைச் சுற்றிவந்து தோற்றபின்னர், வாய்திறந்து சொல்லிவிட்டால் வார்த்தைகள் சிதறுமோவென்று, காகிதத்தில் கோர்த்துக் கடிதமாய் அனுப்பிவைத்தேன்... அதைச் சத்தமிட்டு வாசித்தால் காற்றுக்கும் காதல்வந்து உன்னை முத்தமிடக்கூடுமடி... அதனால் பூக்களோடு அனுப்பியுள்ள பொத்திவைத்த காதலைப் பார்வையால்மட்டும் படி! விடையினையும், உன் விழிகளால்மட்டும் சொல்! ***

விசும்பல்!

தீக்குளித்த சீதை, மூக்கிழந்த சூர்ப்பனகை, அருந்ததி, கண்ணகி, அகலிகை,மாதவியென்று எல்லாப் பெண்களிடத்திலும் ஏதோ ஒரு விசும்பல்... சதவீதத்தைக் கூட்டினாலும், சக மனுஷியாய்ப் பார்க்க மறுக்கிற சமூகத்தில், முள்சுமக்கும் மல்லிகாவும் முன்னேறிய மஞ்சுளாவும் ஏதோ ஒரு புள்ளியில், பெண்ணாகப் பிறந்துவிட்ட தன் விதியை நொந்தபடி... ******