
திரைகட லோடி
அன்று
திரவியம் தேடிவைத்த
துலுக்காணக் கிழவரின்
அழுக்கான பாத்திரம்
நிரம்பிக் கிடக்கிறது,
மிச்சச் சோறும்
கொச்சை வசவுகளுமாக...
Tuesday, October 27, 2009
முதுமை அத்தியாயம்
Posted by சுந்தரா 6 comments
Saturday, October 24, 2009
என்னத்தைச் செய்தீங்க...(நிறைவுப்பகுதி)
கையிருந்த மோதிரம்
காசான உண்மையினை
ஐயமின்றி உணந்திட்டாள்
அவர் மனைவி சிவகாமி...
பொய்யேதும் சொல்லிப்
புதுக்குழப்பம் செய்யாமல்
பைய இடத்தைவிட்டு
அகன்றார் செல்வமணி...
தான்கொண்ட ஆசையால்
தன்குடும்பம் கடனுற்ற
வேதனையைச் சொல்லாமல்
விதிர்த்துநின்றாள் சிவகாமி
ஆதரவாய் அவள்மனதைப்
புரிந்துகொண்ட ஆசிரியர்
பாதகம் இல்லை எல்லாம்
சரியாகும் என்றுரைத்தார்...
புத்தி தடுமாறிப்
பேசுவார் சொல்கேட்டு
சக்திக்குமீறியதாய்ச்
சங்கடத்தைச் சேர்த்துவிட்டேன்
புத்திக்கு எட்டிப்
புலனாகும் நேரத்தில்
எத்தனையோ இழந்துவிட்டோம்
என்றழுதாள் சிவகாமி
எதையும் இழக்கவில்லை
எதுவும் விட்டுப்போகவில்லை
கனவாக வந்துவிட்டுப்
போனதோர் காட்சியிது
உனையே நீ புரிந்துகொள்ள
உண்மைநிலை அறிந்துகொள்ள
கொஞ்சம் செலவழித்துக்
கண்டதோர் காட்சியிது
பிழையான காட்சியெல்லாம்
போயகல இனி வாழ்வில்
நலமே பெருகிடும்
நம்பிட வேண்டுமென்றார்.
இழையோடும் கண்ணீரை
அழுத்தித் துடைத்துவிட்டுப்
பலகாரம் செய்வதற்குப்
புறப்பட்டாள் சிவகாமி
விடிந்தது தீபாவளி
வீட்டிலே மகிழ்ச்சிபொங்க
விதவிதமாய் இனிப்புகளும்
விருந்தும் மணமணக்க
புதியதாய் வாழ்கையைப்
புரிந்துகொண்ட மகிழ்ச்சியுடன்
இனிமையாய் தீபமேற்றி
வழிபட்டாள் சிவகாமி!
Labels: கவிதை.கவிதைக்கதை
Posted by சுந்தரா 0 comments
Saturday, October 17, 2009
தீபாவளி மிச்சங்கள்
விடிய விடிய
விடாத வேட்டுச்சத்தம்...
உறங்கிவிட்ட அம்மாவின்
தலைப்பினைப் பிடித்தபடி,
காதுகளை மூடிக்கொண்டு
கண்திறந்து படுத்திருந்தான் மகன்...
சிதறிய வாணங்கள்
இடைவெளியில் தெரிந்தபோது,
கூரையிலும் விழுமோவென்று
பதறித்தான்போனது மனசு...
உறக்கமில் லாதவனின்
உள்ளம் புரிந்ததுபோல்
புகையோடு விரைவாகப்
புலர்ந்தது புதுப்பொழுது...
ஆளரவ மில்லாமல்
உறங்கிக் கிடந்தது வீதி...
அங்கே,
வெடிக்காத சரவெடி
அடிக்காத பொட்டுவெடி
எரியாத மத்தாப்பூ
விரியாத பூச்சட்டி
ஏதாவது கிடைக்காதா என்ற
ஏக்கம் தலையெடுக்கக்
காகிதக் குப்பையைக்
கண்களால் துழாவுகிறான்,
கால்சட்டை நழுவிவரக்
கைப்பிடித்த சிறுவனவன்...
Posted by சுந்தரா 2 comments
Monday, October 5, 2009
புதிதாய்ப் பிறந்தவன்
மருத்துவமனைப் படுக்கையில்
அவள்
வலியால் துடித்துக்கொண்டிருந்தாள்...
அடுக்களையில் தவறிவீழ்ந்து
அடிபட்டுக் கிடந்தவளை
அடுத்தவீட்டார் ஓடிவந்து
மருத்துவ மனையில் சேர்க்க,
குடித்துவிட்டு நள்ளிரவில்
வீடுவந்தான் கணவன் அவன்...
துணையாரு மில்லாமல்
நிறைமாதம் சுமந்த அவள்
வலிகொண்டு வேதனையில்
நிலைகுலைந்து போயிருந்தாள்...
அவள்
நிலைகண்ட அதிர்ச்சியில்
அவனுக்கு
மனசைவிடச் சட்டென்று
தெளிந்தது போதை...
வெளிர்த்த முகமும்
துளிர்த்த கண் நீருமாய்
அவளைப் பார்க்கையில்
என்னவோ செய்தது அவனுக்கு...
ஆனால் அவள்,
துடிக்கவைத்த வலியையும்
பொருட் படுத்தாதவளாய்,
அடுத்து ஒரு பிறவி வந்தால்
அதிலும்
உங்களோடு வாழவே விருப்பமென்றாள்...
"பைத்தியக்காரி...
நேற்றுவரை நான்
நிறையப் படுத்தினாலும்
கேட்கிறாள் பார்" என்று அவன்
தனக்குள் வியந்தபோது
கேட்காமலே துளிர்த்தது கண்ணீர்...
"பிதற்றாமலிரு"
என்று அவளை அதட்டிவிட்டு
மருத்துவரை அழைக்கிறேன்
என்று அவன் எழுந்தபோது,
"இதை மட்டும் கேளுங்கள்"
என்று கரம்பிடித்து
நிறுத்தினாள் அவனை,
நின்று திரும்பினான்...
அடுத்துவரும் பிறவியில்
ஆணாக நானும்,
நானாக நீங்களும்
பிறப்பெடுக்க வேண்டும்...
மனைவியின் ஏக்கங்கள்
அனைத்தையும் பூர்த்திசெய்யும்
நல்லகணவனாய் நானிருந்து
காட்ட வேண்டும்...
என்று வார்த்தைகளால்
அவனை அறைந்தகணம்,
வலியின் வேதனையில்
வீறிட்டாள் அவள்...
கிலியின் பாதிப்பில்
வியர்த்தான் கணவனவன்...
விதிர்த்து வெளியில் சென்று
மருத்துவரை அனுப்பிவிட்டு,
கைபிசைந்து கதறலுடன்
தனித்து அழுத அவன்,
தப்பான அனைத்தையும்
விட்டுவிட முடிவெடுத்தான்...
ஓங்கிய குரலொன்று
உலுக்கிட நிமிர்ந்தவனை,
"உள்ளே அழைக்கிறார்கள்"
என்றாள் செவிலிப்பெண்.
கலக்கமா யிருந்தது அவனுக்கு,
நலக்குறைவாய் ஏதும்
நடந்திருக்குமோ என்று...
உள்ளே,
ஆடிய தொட்டிலில்
அழகிய பூவாய்க் குழந்தை...
அருகே,
வாடிய வெளிர்கொடியாய்த்
துவண்டுகிடந்தாள் அவள்.
"பாட்டில் வாங்கப்போகலையா?"
செவிலியின் குரல்வரவே
அதிர்ச்சியுடன் சொன்னான் அவன்,
"அதெல்லாம்,
நேற்றோடு விட்டாச்சு" என்று...
"குளூக்கோஸ் பாட்டிலைச்
சொன்னேன் நான்" என்றுவிட்டுக்
குதர்க்கமாய்ச் சிரித்தாள் செவிலிப் பெண்...
பதற்றம் குறைந்தவனாய்
பித்தமெல்லாம் தெளிந்தவனாய்,
தலைகுலுக்கிச் சிரித்தான் அவன்...
கண்கள்
கசியச் சிரித்தாள் அவன் மனைவி.
Labels: கவிதைகள், கவிதைக் கதை
Posted by சுந்தரா 0 comments
Thursday, October 1, 2009
காதலுடன் நான்...
புலருகிற பொழுதுகளில்
என்னோடு
வெளிச்சமாயிருந்தவன் நீ...
விலகி வெளிமண்ணில்
வேலைதேடிப் போனாலும்
உன்
விலகாத ஞாபகங்கள்
இன்னமும் இனிமையாக...
அன்று,
உன்னோடு பகிர்ந்துகொண்ட
தேநீர்க் கோப்பைகள்
இன்று
என்னோடிருந்து என்
தனிமையைப் பகிர்ந்துகொள்கின்றன...
வாசலில் பூக்கோலம்
வாசமான மலர்கள்,
ஆசையாய் நீ உண்ணும்
தோசை என்று அத்தனையும்
இன்று
எனக்குப் பிடிக்காத பொருட்களின்
பட்டியலில் வரிசையாக...
மாசத்தில் சிலதினங்கள்
பேச முடிந்தாலும்
வீட்டு விஷயங்கள்
வேலைச் சுமையென்று
காசுக்குப்பெறாத விஷயங்கள் பேசிவிட்டு,
கடைசியாய் நீ கொடுக்கும்
கைபேசிமுத்தம் மட்டுமே
காதோடு உறவாடி
மனசில் நிறைந்திருக்கிறது...
நம்முடைய பிறந்த நாட்கள்
நாம் இணைந்த திருமணநாள்
இன்னமும் வருகின்ற
நல்லநாள் அத்தனையும்
பொல்லாத நாட்களாகிக்
கொல்லத்தான் செய்கிறது...
சொல்லத்தான் இயலாத
தவிப்புகள் அத்தனையும்
வெள்ளைக் காகிதத்தில்
விழிநீர் சேர்த்தெழுதி
உன்னுடைய முகவரிக்குத்
தூதாக அனுப்புகிறேன்...
தள்ளிவைத்துப் பார்த்திருக்கும்
தெய்வத்தை,
வசவுகளால் அள்ளி அர்ச்சித்து
ஆத்திரம் கொள்ளாமல்,
நல்லதே நடக்குமென்று
நம்பிக்கை சேர்த்துவைத்து
உள்ளத்தில் இருத்திக்கொள்
சேரும்காலம் தூரமில்லை...
Labels: கவிதை
Posted by சுந்தரா 1 comments
