சாக்குப்போக்கு!
இடியுடன் மழையடிக்க இரண்டுநாள் வரவில்லை மேகம் திரண்டுகொள்ள முந்தாநாளும் முடியவில்லை... நேற்றைக்கு வந்தபோது நேரமான காரணத்தால், காத்திருந்த களைப்பில் நீயும் கண்ணயர்ந்து உறங்கிவிட்டாய்... இன்றைக்கும்கூட இரண்டொரு துளிவிழவே கண்டுவிட முடியுமோவென்று கவலையில் நான் தவித்துப்போனேன்... ஆனால், நொண்டிச் சாக்கெல்லாம் நடைமுறைக்கு உதவாதென்று கண்ணைக் கசக்கிக்கொண்டு கனத்தமுகம் காட்டுகிறாய்... என்ன நான் செய்வதடி? என்பிழைப்பு இப்படியென்று அப்பாவி முகத்துடன் அல்லியிடம் சாக்குச்சொன்னது, உப்பியும் இளைத்தும் ஊரைச்சுற்றும் சந்திரன்!