இடுகைகள்

2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நான்...இயற்கை பேசுகிறேன்!

படம்
எங்கு பார்த்தாலும் புலம்பல் இப்படியா பெய்வதென்ற குமுறல்... வெள்ளம் என்கிறீர்கள் வெறுப்பைக்கொட்டி எழுதுகிறீர்கள்... உள்ளும்புறமும் தண்ணீரென்று ஊரெல்லாம் அங்கலாய்க்கிறீர்கள்... ஆனால், என்ன குற்றம் செய்தேன் நான்? வா வா என்று வருந்தி அழைத்தீர்கள்... வாடுது பயிரென்று வயலில் நின்று விம்மினீர்கள்... கடவுளே, உனக்குக் கண்ணில்லையா? என்று கையை நீட்டிக் கதறினீர்கள்... கடனைக் கட்ட வழியில்லாமல் கடிதம் எழுதிவிட்டுக் கழுத்தில் கயிற்றை மாட்டிக்கொண்டீர்கள்... கோயில் கண்ட இடமெல்லாம் யாகத்தீ வளர்த்தீர்கள், மழைக்காக ஜெபித்தீர்கள், தொழுகையில் அழுதீர்கள்... கழுதைக் கெல்லாம் கல்யாணம் பண்ணிவைத்து வெய்யில் வானத்தை வெறித்து நின்றீர்கள்... மரங்களுக்குப் பதிலாக மாடிவீடாய் அடுக்கிக்கட்டி இறங்கிவந்து அனைவருமாய் கூட்டுப் பிரார்த்தனை செய்தீர்கள்... ஏரிகளில் இடம்வாங்கி எடுப்பாய் வீடுகட்டி ஏசி போட்டு மாளவில்லை எப்போ வரும் மழையென்றீர்கள்... இத்தனையும் கேட்டுவிட்டு எத்தனை தவிக்கிறீர்களென்று, ஐயோ என இரங்கி ஆறுதலாய்ப் பொழிகையில், குளமாகுது ஊரென்று குமுறிக்குமுறி அழுகிறீர்கள்

காணாமல் போனவை பற்றிய அறிவிப்பு!

படம்
ஒற்றெழுத்துக்கள் உறவுகளில் உண்மை சுத்தமான காற்று கொத்தி விளையாடும் குருவிகள் கிட்ட ஓடிய நீரோடை கீற்றுப் பந்தலின் குளிர்ச்சி ரெட்டைச்சடைப் பின்னலில் வட்டத் தோரணமாய்ப் பூக்கள் முற்றத்தில் சாணம் முறமெடுத்துப் புடைக்கும் பெண்கள் தொட்டி கட்டிய கிணறுகள் வட்ட வட்டமாய் எருமுட்டை முட்டை அடைவைத்து இரு பத்தொருநாள் காத்திருந்து முற்றத்தில் திரியவிடும் கோழிக் குடும்பம்... எட்டணாவுக்குக் கிடைக்கும் பத்துத் தேன்மிட்டாய் கட்டிச் சூடமிட்டாய் கரையாத கல்கோனா அடுப்பில் சுட்ட பனம்பழம் அனலில் வெந்த பனங்கிழங்கு மடிப்புவைத்துக் கட்டும் இடுப்பைச் சுற்றிய தாவணி பொத்திவைத்த பிரியங்களைச் சுமந்துவரும் தபால்காரர் பெட்டிவைத்துத் தலையில் விற்றுவரும் வளையல்காரர் இப்படி, எத்தனையோ காணவில்லை, தேடினாலும் கிடைக்கவில்லை... கோடிப் புண்ணியமாகும், கொஞ்சம் கூடிக் கண்டுபிடியுங்களேன்! **கல்கோனா** - இது தென் மாவட்டங்களில் அந்தக் காலத்தில் விற்ற ஒரு மிட்டாய். வாயில் கரையாமல் நீண்டநேரம் கல் போலக் கிடப்பதால் அந்தப் பெயர்.

தாயாகக் கடவது!

மகனுக்குத் திருமணமாகி மாதம் ஒன்றுதான் முடிந்திருந்தது... அதற்கிடையில் விருந்துக்கு வந்த மகள் விழிகலங்கித் திரும்பிப் போனாள்... விடுதியிலிருந்து வந்த மகன் வெறுத்து முகம் கறுத்துப்போனான்... வந்த மருமகள் என்னதான் செய்கிறாளென்றால், பெருமையாய்ப் பேசுகிறாள், உரிமையெடுத்துக்கொள்கிறாள், மாமியாரின் மளிகைக் கணக்குமுதல் மாமனாரின் வங்கிக் கணக்குவரை... ஆனாலும், மனசு கேட்கவில்லை மீனாட்சிக்கு... வருகிற தீபாவளிக்கு வந்துபோங்கள் என்று மகனையும் மகளையும் மறுபடியும் கூப்பிட்டாள்... திரும்ப வந்து விசனப்படத் திராணியில்லை என்றும், தின்பண்டம் ஏதும் செய்தால் கொடுத்தனுப்பு என்றும் மகளும் மகனும் தொலைபேசி பதிலுரைக்க, கலங்கிப்போன கண்களுடன் கால்நீட்டி அமர்ந்தாள்... அதற்குள் தலைதீபாவளிக்குப் போகிறோம் ஆசிகொடு அம்மா என்று பேசியபடி பாதம்தொட்டான் மகன், யோசித்தபடி அருகில் நின்றாள் மருமகள்... எழுந்து நின்ற மீனாட்சி, ஆசிகேட்ட மகனின் விழிதவிர்த்து அருகில் நின்ற மருமகளிடம் சொன்னாள், "நீயும், சீக்கிரம் தாயாகக் கடவது" என்று!