வெளிர்நீல வானத்தில்
வெள்ளிறகு மேகங்கள்,
வெய்யில் பூக்களோடு
விரிந்திருக்கும் தருநிழல்,
காற்றில் மிதந்துவந்து
கன்னம்தொடும் மழைத்துளி,
ஆற்றுநீர்ச் சுழிப்பில்
அலைக்கழியும் சருகு,
நீளமான மழைநாளில்
நிமிஷநேரச் சூரியன்,
தூரிகையில் மாயம்செய்யும்
துளியளவு தண்ணீர்,
மனம்நிறைந்த மகிழ்ச்சியில்
முகிழ்த்துவரும் கண்ணீர்,
இருளணிந்த மலையினில்
எங்கோ தெரியும் விளக்கு...
கருநீல வானத்தில்
கதிர்முளைக்கும் கிழக்கு,
வழிநடந்த பாதத்தை
வருடிவிடும் புல்மடி,
மார்கழிப் பூக்களின்
மடிதுயிலும் மென்பனி,
கூடித்திளைத்த பின்
கொஞ்சநேரத் தனிமை,
காதலின் மொழியோடு
கலந்துவரும் ஒருமை,
இவையனைத்தும் ரசித்தபின்னும்
எழுதுவதைக் கவிதையென்பது
எந்த ஊர் நியாயம்?
***