மழைக்காலத்து மலர்கள்!



மழைக் காலத்து மலர்கள்!

மெல்ல மழை விலக,
வானவில் தோரணத்தை
வளைத்துக் கட்டியது
வானம்...

அதன்,
வண்ணக் கலவையில்
எண்ணம் மயங்கிப்போய்,
அதில்,
கொஞ்சத்தைத் திருடியது
குளிர்ந்த மழைக்காற்று...

கன்னமிட்ட வண்ணத்தைக்
கறைபடாமல் ஒளித்துவைக்க,
நல்ல இடம் தேடி
நாளெல்லாம் அலைந்தது...

காட்டுச் செடிகளின்
கன்னத்தை வருடிவிட்டுக்
கேட்டு இடம்வாங்கிக் 
கிளைகளுக்குள் புகுந்தது...

வாரிச் சுருட்டிய
வண்ணக் கலவையை
வேருக்கு வெகு அருகில்
புதைத்துவிட்டு எழுந்துவர,

தன்னை வருடிய
காற்றின்மேல் காதலுற்று,
சில்லென்று பூத்துச்
சிரித்தது பூக்காடு!

              ***



கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!