மலர்கள் அழகுதான்!
பூக்களின் மணத்தினால்
பூப்படைந்த பொழுதினில்
வண்டுகள் பாட்டிசைக்க
நாணிவிழும் எழில் மலர்கள்...
பன்னீர்ப் பூக்களின்
பரந்த விரிப்பினை
எட்டிப் பார்த்திடும்
எழில் முழுநிலவு...
மண்மடி சேர்ந்த
முல்லையின் சிரிப்பினில்
கொள்ளை போனது
விண்மீனின் கூட்டம்...
கிணற்று நீரினில்
விரித்த மலர்ப்போர்வை
கலைத்து விளையாடுது
கள்ளமில்லா மீன்கள்...
முற்றத்து நிலவொளியில்
தென்றலின் சிலுசிலுப்பில்
சத்தமின்றி உதிருது
வேம்பின் பூக்கள்...
காலை விடியலில்
போர்வை உதறலில்
தரையெங்கும் விரிந்தது
கூந்தலின் மலர்கள்...
ஊரோரக் காட்டில்
உடல் உறங்கும் மேட்டில்
இன்னமும் உறங்காத
வெள்ளை மலர்கள்...
இப்படி,
வீதியில் தொடங்கி
விதி முடியும் எல்லைவரை
எங்கே விழுந்தாலும்
மலர்கள் அழகுதான்....
மலர்கள் வீழ்ந்தாலும் அழகுதான். அருமையான கவிதை சகோதரி.
பதிலளிநீக்குஅழகினை ரசித்தமைக்கு நன்றி ரங்கன்.
பதிலளிநீக்கு