இடுகைகள்

கடவுள் வேலை!

என்னவேலை கொடுத்தாலும் செய்கிறேனென்று வந்தவனிடம் சின்னதொரு வேலைதான் செய்கிறாயா என்றேன்... கண்கள் மின்னக்கேட்டான் "என்ன வேலை சார்?" என்று... நிழலிலே வேலை நேரமெல்லாம் கணக்கில்லை, பிடித்ததைச் சாப்பிடலாம் நினைத்தபோது  தூங்கலாம்... ஏ சி யில் இருக்கலாம், எல்லாச் சேனலும் பார்க்கலாம், ஆசையிருந்தால் பாடலாம், பாடிக்கொண்டே ஆடலாம்... வீட்டுச் செடிகளையும் வளர்க்கிற நாய்களையும் நாட்டமாய்ப்  பராமரித்து நாள்முழுக்க ரசிக்கலாம்... காலையில் காப்பியும் கார்ன் ஃப்ளேக்ஸும் தந்துவிட்டு, மத்தியான சமையலையும் மணி எட்டரைக்குள் முடிக்கலாம்... சாப்பாட்டுக் கூடையில் சமைத்ததை எடுத்துவைத்து, ஆபீசுக்குக்கு அனுப்பிவிட்டால் அப்புறம் சிரமமில்லை... எப்போது விருப்பமோ அப்போது சலவைசெய்து, அழுக்கெல்லாம் பெருக்கிக்கூட்டி, அங்கணத்தைச் சுத்தம்செய்து, விருப்பமான தேநீரை நான் வீடுவருமுன் போட்டால்போதும்... இறுக்கம் குறைந்து நறுக்கென்று சுவைப்பதற்கு ரெண்டேரெண்டு மசால் வடை... மற்றபடி, உனக்கும் எனக்கும் சேர்த்து இருக்கிறதில் எளிதான இரவுசமையல் போதும்... விருப்பமென்றால் ...

சொல்லுக்குள் அடங்காத கவிதைகள்!

படம்
படம் : இணையத்திலிருந்து வெளிர்நீல வானத்தில் வெள்ளிறகு மேகங்கள், வெய்யில் பூக்களோடு விரிந்திருக்கும் தருநிழல், காற்றில் மிதந்துவந்து கன்னம்தொடும் மழைத்துளி, ஆற்றுநீர்ச் சுழிப்பில் அலைக்கழியும் சருகு, நீளமான மழைநாளில் நிமிஷநேரச் சூரியன், தூரிகையில் மாயம்செய்யும் துளியளவு தண்ணீர், மனம்நிறைந்த மகிழ்ச்சியில் முகிழ்த்துவரும் கண்ணீர், இருளணிந்த மலையினில் எங்கோ தெரியும் விளக்கு... கருநீல வானத்தில் கதிர்முளைக்கும் கிழக்கு, வழிநடந்த பாதத்தை வருடிவிடும் புல்மடி, மார்கழிப் பூக்களின்  மடிதுயிலும் மென்பனி, கூடித்திளைத்த பின் கொஞ்சநேரத் தனிமை, காதலின் மொழியோடு கலந்துவரும் ஒருமை, இவையனைத்தும் ரசித்தபின்னும் எழுதுவதைக் கவிதையென்பது எந்த ஊர் நியாயம்? ***

வேலையில்லாப் பட்டதாரியின் 'வீட்டுக்' குறிப்புகள்!

அப்பா வரவுக்கும் செலவுக்குமிடையில் வட்டிக்கணக்குப் பார்த்தபடி புட்டிக் கண்ணாடி வழியாகப் பிள்ளைகளின்  எதிர்காலத்தைத் தேடுபவர்... சட்டென்று கோவப்பட்டாலும் சம்சாரத்துக்கு முன்னால் பெட்டிப்பாம்பு... அம்மா அக்கறை காட்டுகிறேனென்று அவஸ்தைப்படுத்துபவள் அவ்வப்போது, அன்பில் கரைத்தும் அழவைப்பவள். தப்பென்று தெரிந்தாலும் தன்மையாய்ப் புரியவைப்பவள்  அப்பாவுக்கும் பிள்ளைகளுக்குமிடையில் எப்போதும் தவிக்கும் இருதலைக்கொள்ளி எறும்பு... அக்கா petty cash படியளப்பதில் பெரிய மனசுக்காரி, சிலசமயம், தட்டிக்கேட்பதில் தாய். தம்பி போட்டுக்கொடுக்கவென்றே வீட்டிலிருக்கிற ராட்சசன்... மூத்தவனை முட்டாளாக்க இளையவனாய்ப் பிறந்துதொலைத்த எதிரி!  *****

பார்வையொன்றே போதும்!

படம்
நல்லபெண்கள் நகைத்தால் தளிர்க்குமாம் முல்லை அருகில் சென்று உதைத்தால் தளிர்க்குமாம் அசோகம் முகங்கனிந்து பார்த்தாலே பூக்குமாம் மாம்பூ பெண் மூச்சுக் காற்றாலே உயிர்த்திடும் உலகம்... நீ,  நேற்றுவரை நிராகரித்த காதல் பார்வைகளை என் தோட்டத்தில் பதியனிட்டேன்... அவையும் நாற்றுகளாகி நாலு இலை விட்டதோடு தோற்றுப்போய் நிற்கின்றன... அதற்காகவாவது பார்வையொன்றைப் பகிர்ந்திடு பெண்ணே, பாலையிலும் பூக்கள் பூக்கட்டும்! டிஸ்கி : உத்தமமான குணங்களையுடைய பெண்கள், பார்த்தால் தளிர்க்குமாம் மாமரம், நகைத்தால் தளிர்க்குமாம் முல்லை, அணைத்தால் தளிர்க்குமாம் மருதோன்றி, உதைத்தால் தளிர்க்குமாம் அசோகம், முத்தமிட்டால் தளிர்க்குமாம் மகிழமரம், இவைதவிர, நல்லதொரு பெண்ணின் நிழல்பட்டாலே தளிர்க்குமாம் சண்பகம். இது, சும்மா யாரும் பேச்சுக்கு சொன்னதில்லை. வில்லிப்புத்தூரார் தன் பாடலில் சொன்னது.

காட்சிப் பிழை!

படம்
புகைப்படம் : இணையத்திலிருந்து. கனத்த முகம் கருக்கு மீசை நெரித்த புருவமும் எரிக்கிற பார்வையுமாய்க் கைவைத்த நாற்காலியில் காசித் தாத்தா... நாற்காலிச் சரிவில் நளினமாய்க் கைவைத்து, நாணமும் அச்சமுமாய் நாகலச்சுமி ஆச்சி... புகைப்படத்தை உற்றுப்பார்க்கிற எல்லாரும் சட்டென்று சொல்லுவார்கள், காசித்தாத்தாவின் கண்களில் கடுங்கோபம் தெரிகிறதென்று... ஆனால், கண்ணைத் துடைத்துக்கொள்ளுகிற ஆச்சியின் கண்களில் மின்னலாய் விரியும்... புகைப்படக்காரனுக்குப் புரியாத தினுசில், சின்ன ஸ்பரிசமும் கண்ணிறையக் கனிவுமாக இன்னும் கொஞ்சம் பக்கத்தில் நிற்கச்சொல்லி, அவர் பார்வையால் பேசியது!

சாக்குப்போக்கு!

இடியுடன் மழையடிக்க இரண்டுநாள் வரவில்லை மேகம் திரண்டுகொள்ள முந்தாநாளும் முடியவில்லை... நேற்றைக்கு வந்தபோது நேரமான காரணத்தால், காத்திருந்த களைப்பில் நீயும் கண்ணயர்ந்து உறங்கிவிட்டாய்...  இன்றைக்கும்கூட இரண்டொரு துளிவிழவே கண்டுவிட முடியுமோவென்று கவலையில் நான் தவித்துப்போனேன்... ஆனால், நொண்டிச் சாக்கெல்லாம் நடைமுறைக்கு உதவாதென்று கண்ணைக் கசக்கிக்கொண்டு கனத்தமுகம் காட்டுகிறாய்... என்ன நான் செய்வதடி? என்பிழைப்பு இப்படியென்று அப்பாவி முகத்துடன் அல்லியிடம் சாக்குச்சொன்னது, உப்பியும் இளைத்தும் ஊரைச்சுற்றும் சந்திரன்!

இந்தியனின் விதி!

அன்னாவின் உண்ணாவிரதம் அமெரிக்க சதி, ஊழலை எதிர்ப்பதெல்லாம் உள்நாட்டுச் சதி, இடையில்வரும் தடையெல்லாம் எதிரணியின் சதி என்று, ஆராய்ந்து சொல்கிறது ஆளும்கட்சியின் மதி, இதையெல்லாம், அனுபவித்தே தீரவேண்டியது அப்பாவி இந்தியனின் விதி! படம்: இணையத்திலிருந்து