என்னத்தைச் செய்தீங்க... (8)

என்னத்தைச் செய்தீங்க...(கவிதைக்கதை- எட்டாவது பகுதி)

மட்டைப் பந்தாடிய
மதுரையின் சிறுவர்கள்
ஒற்றைப்புற விளக்கை
உடைத்துவிட்ட காரணத்தால்
பொன்போல மதுரைக்குப்
போன வாகனம்
புண்பட்டுத் திரும்பியதைக்
கண்டார் செல்வமணி...

சேமித்த காசெல்லாம்
செலவாகிப் போய்விடவே
சாமிக்கு நேர்ந்துவைத்த
உண்டியலைத் திறந்தெடுத்து
வாகன விளக்கினைச்
சரிசெய்து வந்தவரை
வாய்மூடி மௌனமாய்ப்
பார்த்திருந்தாள் சிவகாமி.

திருவிழாக் காலமாய்
தீபாவளி வந்தது...
பள்ளிக்குச் சென்று
திரும்பிய தந்தையிடம்
பிள்ளைகள் உடைவாங்கப்
போகலாம் என்றுரைக்க,
முள்ளிலே மிதித்தவராய்
முகம்கறுத்தார் செல்வமணி...

செல்லமகள் சொன்னது
செவியிலே கேட்கலையோ?
நல்லநாள் வருமுன்னே
நாலும் வாங்கவேண்டாமோ?
என்றுதானும் மக்களுக்கு
இசைவாகக் குரல்கொடுத்து
இன்றுபோய் அனைவருக்கும்
ஆடைவாங்கலாம் என்றாள்...

இன்றுசெல்ல இயலாது
இன்னொருநாள் வாங்கிடலாம்
என்று முகம்திருப்பி
மெதுவாகச் சொன்னபடி,
சென்றுதான் கழற்றிய
சட்டையை அணிந்தபடி
பையைத் தடவிப்பார்த்தார்
பெருமூச்சைப் படரவிட்டார்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!