கல்லியல் ஆதி...


இந்திரனும் சந்திரனும்
இணைந்தே சதிசெய்ய
அந்தநாள் பூவுலகில்
நிகழ்ந்ததோர் அவலமிது...

சுந்தரமாய்த் தேயும்
சுடர்மிகு நிலவினுக்கு
வந்ததோர் களங்கமும்
நிரந்தரமாய் நிலைத்ததன்று...

சேவலாய் நள்ளிரவில்
சந்திரன் குரலெழுப்ப
ஆவலாய் நதியாடப்
புறப்பட்ட கௌதமனும்

ஆற்றங்கரை நோக்கி
அகன்ற அவ்வேளை,
அகலாத இரவுகண்டு
ஐயம் மிகக்கொண்டான்

கேட்ட குரலெண்ணிக்
குழப்பம் மிகுந்திடவே
மதியினில் கேள்வியைப்
பதியமிட்டு வந்தவேளை,

இந்திரனின் சதிவலையில்
இறுகப் பிணைந்தபடி
சுந்தரனாம் அன்னவனைச்
சேர்ந்திருந்தாள் அகலிகையும்...

வந்தவன் பிறனென்று
புத்திக்குப் புரிந்தபின்னும்
மந்திரம் போலவளும்
மனமிசைந்து மயங்கிநின்றாள்

கண்டான் கௌதமனும்
கண்ணெதிரே களவதனைக்
கொண்டான் பெருங்கோபம்
எரிதழலாய் மாறிநின்றான்

தன்னிலை மறந்தாள்தன்
துணைவியென்ற றிந்தவனாய்
இல்லுறை மனைவியைக்
கல்லியல் ஆதியென்றான்

விதியங்கு ஜெயித்தது
வேதனை பெருகிடவே
பதியினை நோக்கிக்
கதறினாள் அகலிகையும்...

இழிந்தனை நீயும்
இதயத்தில் என்றுரைத்து,
கழிந்திடும் உன் துயர்
காத்திருப்பாய் என்றுசொல்லி,

பழியுற்ற பெண்ணவளின்
பாவத் துயர்துடைக்க
வழியினில் ராமனும்
வருவான் என்றுரைத்தார்

ஆயிரம் ஆண்டுகள்
அகலாத உறுதியுடன்
தூயவ ளாகித்
துலங்கிடும் துடிப்புடனே

ஆவலுடன் காத்திருந்தாள்
அகந்தை அழிந்திருந்தாள்
பார்த்தறியாப் பரம்பொருளை
நோக்கியே தவமிருந்தாள்

வந்தனன் ராமனும்
வனவழியில் வில்லுடனே
விந்தையாம் திருவடித்
துகளினால் உயிரடைந்தாள்

'அன்னையே' என்று
அன்புடன் விளித்த அண்ணல்
பெண்ணவள் கொண்ட
பெருந்துயரம் மாற்றிவிட,

கண்ணிலே நீருடன்
கைதொழுது நின்றவளும்
பெண்ணாகப் பிறந்ததன்
பெருமையையும் அன்றுகண்டாள்!


"கல்லியல் ஆதி" என்ற இந்த வார்த்தைகள், "கல்லாகிக் கிடப்பாயாக" என்ற பொருளில், கௌதம முனிவனால், இந்திரனால் கற்பிழந்த தன் மனையாள் அகலிகையை நோக்கிச் சொல்லப்பட்டவையாக, கம்பனால் இராமாயண நூலில் ஆளப்பட்டவையாகும்.

கருத்தினில் உடன்பாடு, முரண்பாடு என்பனவற்றைக் கருத்தினில் கொள்ளாமல், கம்பனின் வார்த்தைகளை எளிதாக்கிப் படைக்கப்பட்டதே இக்கவிதை.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!