சுட்டது நிஜம்...

மழைபெய்து ஓய்ந்திருந்த மணக்கும் இளம்மாலை தும்பிகள் பறந்துகொண்டு சுதி சேர்க்கும் எழில்வேளை கம்பிக்கதவு தாண்டி வாயிலில் அமர்ந்திருந்தேன் சந்திரனைத் தோற்கடிக்கும் பொன்னெழில் வதனமுடன் வந்து நின்றாள் என்மனைவி சந்தேகப் பார்வையுடன்... விந்தையாக எனைப்பார்த்து வித்தியாசமாய்ச் சிரித்தாள் என்ன கேட்கப்போகிறாள் என்று மனசுக்குள் சந்தடியின் இடைவெளியில் சின்னதாய் ஒரு பட்டிமன்றம் சிந்தனைகள் விரிந்திடவே சிரித்துக்கொண்டேன் எனக்குள்ளே... அந்தி உணவுக்கு என்னவேண்டும் என்பாளோ? இந்தப்புடவையில் நான் அழகா எனக் கேட்பாளோ? முந்தைய நினைவுகளை மனம் இனிக்கச் சொல்வாளோ? என்று பலவாறாய் எண்ணித் திகைத்தவேளை "தண்ணிலாரி வந்து முன்னாலே நிக்கிறது கண்ணுக்குத் தெரியாமல் கனவா"என்று உலுக்கிவிட அந்தரத்தைத் தொட்டுவிட்டு அறுந்துவீழ்ந்த பட்டம்போல சந்தோஷம் வடிந்தவனாய்க் குடமெடுக்க விரைந்து சென்றேன்