கண்ணனுக்கு அன்னையானாய்...



அன்னையே யசோதையம்மா
ஆயர்குலப் பெண்கொடியே
அச்சுதனைப் பிள்ளையென
அன்பாக வளர்த்தவளே

உன்பிள்ளை அறியாமல்
கண்ணனுக்குத் தாயானாய்
மண்ணிலே மகிமைபெற்றாய்
மாறாத சுகங்கள் கற்றாய்

வெண்ணெய் திருடி உண்டு
வேடிக்கை செய்தபோது
கண்ணனைக் கட்டிவைத்து
அன்பாகக் கடிந்துகொண்டாய்

மண்ணெடுத்துத் தின்றுவிட்டு
மாநிலத்தைக் காட்டுகையில்
கண்ணிரண்டும் நீர்நிறைய
கல்லாகச் சமைந்துபோனாய்

வேய்ங்குழலில் இசையெழுப்பி
வேதனைகள் தீர்த்தபோது
தாய்மனம் தளும்பிடவே
தன்னிலை மறந்துநின்றாய்

பிள்ளையாய்த் தோழருடன்
பெருங்குறும்பு செய்திடினும்
அன்னையாக அமைதியுடன்
அமைதியுடன் ரசித்திருந்தாய்

என்ன தவம் செய்தாயோ
யார்கருணை கொண்டாயோ
மண்ணகத்துத் அன்னையெல்லாம்
உன்னைக்கண்டு ஏக்கம்கொண்டார்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!