ஜனனம்


அலுத்து உடல்வலிக்க
அன்றைய உணவுக்காக
உழைத்துத் திரும்பிடும்
வறுமைச் சேலைக்காரி...

மலையளவு துயரம்
மனசினில் புதைந்திருக்க
தலைச்சுமையில் முள்விறகு
வயிற்றிற்குள் முட்டும்பிள்ளை...

அவள்
காயாத விறகெடுத்து
காய்ந்துபோன வயிற்றோடு
அடுப்பைக் கூட்டி
உலையேற்றும் இரவுவேளை...

கழற்றிப் போட்டுவந்த
தலைப்புச் சேலையினில்
முடிந்துவைத்த காசுக்குக்
குடித்துவந்த அவள் கணவன்...

அடுப்பில் உலைகொதிக்க
அனலாக மனம்தகிக்க
தழலாக வந்துவிழும்
சாராய வசவுச்சொற்கள்...

எடுத்துக்கொள் கடவுளே
இந்தவாழ்க்கை இனியும்வேண்டாம்
என்று மனம்குமுற
எழுந்தது வயிற்றில்வலி...

சுழித்துச் சிதறடித்த
வேதனையை விழுங்கிவிட்டு
உரக்கக் குரல்கொடுத்தாள்
கணவனை அழைப்பதற்கு...

போதையின் போர்வையில்
புலம்பிக் கிடந்தவனின்
காதில் விழாதகுரல்
அயலாரை அழைத்துவர

அடுப்பின் கணகணப்பில்
அரைகுறை இருள்விளக்கில்
சிரிப்பை மறந்தவளின்
வாழ்க்கையில் ஒளிஉதயம்...

வீறிட்டு அழுதபிள்ளை
விரல்பூவால் தொடச்சிலிர்த்து
மாறியது சோகம்
முகிழ்த்தது மென்முறுவல்...

பெற்றமகன் முகத்தைப்
பெருமையுடன் பார்த்தவேளை
அவள்
பட்டதுயரமெல்லாம்
பஞ்சாகிப் பறந்ததங்கே...

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!