அம்மாவின் அருமைமகன்...


இரவை உலுக்கிய
இடைவிடாத இருமல்
உறக்கமின்றி வருடியது
அன்னையின் விரல்கள்...

காய்ச்சிய பாலில்
கற்கண்டும் மிளகுமிட்டு
ஆற்றி இதமாக
அம்மா கொடுக்கையில்
தொண்டைக் குழிக்குள்
தோன்றியது ஆசுவாசம்...

பண்ணிரண்டாண்டுகள்
பறந்துபோன பின்னர்,
உள்ளிருக்கும் உயிரை
உருவி யெடுத்தல்போல
இன்றும் அதே இருமல்
அன்னையின் சிறுஅறையில்...

சத்தமின்றி எழுந்துசென்று
கதவினைத் தாளிட்டு
கும்மென்று ஒலியெழுப்பும்
குளிர்சாதனம் உயிர்ப்பித்து
நிம்மதியாய் உறங்கினான்
அம்மாவின் அருமைமகன்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!