உன்னாலே...உன்னாலே...


மனசுப் பிரதேசத்தில்
ஆயிரமாயிரமாய்
வண்ணத்துப்பூச்சிகளின்
கண்கொள்ளா அணிவகுப்பு...

பள்ளிக்குச் செல்லும்
முதல்நாள் மாணவனாய்
உள்ளம் நிறைய
உருளும் பரபரப்பு...

எங்கேயோ பிறந்திருந்து
எனக்கென்று வளர்ந்திருந்து
என்னை காண்பதற்கு
இன்றுவரும் வெண்ணிலவே,

உன்னைச்
சந்திக்கப்போகும்
அந்த நிமிஷத்தில்
என்னென்ன சொல்லி
என்னைக் கொள்வாய் நீ...

அம்மாவின் பின்னால்
அடக்கமாய் ஒளிந்தபடி
கொல்லும் பார்வையால்
என்னைச் சிதைப்பாயோ...

கன்னம் சிவக்கப்
புன்னகை மலர்பூக்க
பின்னல் நுனிதிருத்தி
என்னைக் கலைப்பாயோ...

உள்ளம் நிறைய
உற்சாகம் சுமப்பதனால்
நெஞ்சம் நிறைந்து
விழிகளும் தளும்புதடி...

ஆனால்,
ஒன்றுமட்டும் இன்னும்
விளங்கிட வில்லையடி...
ஆசையின் அலைகளில்
அலைபாயும் நேரத்தில்

ஓசையே இல்லாமல்
கோபம் தொலைந்துபோய்
மென்மையே மனதினில்
முழுமையாய் நிறைகிறது...

அச்சம் என்பதையே
அறியாத நான் கூட
காதலின் மயக்கத்தில்
கோழையாகிப் போகின்றேன்

கிரகணம் கண்ட
கீழைச் சூரியனாய்
மரணம்வரை தொட்டு
மறுபடியும் உயிர்க்கின்றேன்...

இத்தனையும் நிகழ்த்திவிட்டு
எதுவுமே அறியாதவள்போல்
வெட்கம் போர்த்தி எனை
வதைப்பாயோ என் கிளியே...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!