கல்யாண மாற்றம்...

நிலவனைய முகமுனக்கு
நித்திலமே என்று சொன்னாய்,
அகமெல்லாம் குளிரெடுக்க
அருகணைந்து உருகிநின்றேன்...

பயமணிந்த மான்பிணைபோல்
மருளும் எழில் விழியிரண்டும்
கயலழகைப் போன்றதென்றாய்
கண்மயங்கி முகம்கவிழ்ந்தேன்...

விரல்பிடித்து நகம்நோக்கி
அலைகுளித்த பவளமென்றாய்
அழகிய உன் புகழ்மொழியில்
அத்தனையும் மறந்துநின்றேன்...

கருமையான எழில்கூந்தல்
கண்ணருகில் மேகமெனக்
கலைந்திடுதல் கவிதையென்றாய்
நிலைதளர்ந்து நெஞ்சினித்தேன்...

இன்று,
மணமுடித்து மனைவியாகி
முகம்பார்த்து நிற்கின்றேன்
மரம்போல் ஏன் நிற்கிறாய்?
என்றெரிந்து விழுகிறாயே...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழுக்கு வணக்கம்!

நான்...இயற்கை பேசுகிறேன்!

அவளும் தாயானாள்!